காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மாற்றுத்திறனாளிகள் உள்பட 38 பேருக்கு ரூ. 4.42 லட்சத்துக்கான அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை வழங்கினார்.
இந்த குறைதீர் முகாமில் முதியோர் ஓய்வூதியம், பசுமை வீடுகள், பட்டா மாற்றம், வாரிசுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பேருந்து வசதி, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை, தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, குடிநீர், மின்வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியுதவி போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டன.
இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 பேருக்கு திருமண உதவித் தொகையாக தலா ரூ.50,000 வீதம் ரூ. 2 லட்சம், 8 பேருக்கு திருமண உதவித் தொகையாக தலா ரூ.25,000 வீதம் ரூ. 2 லட்சம், தாலிக்குத் தங்கம் ஆகியவற்றை வழங்கினார். மேலும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.960 வீதம் ரூ.9600 மதிப்பிலான பிரெய்லி கைக்கடிகாரம், மனவளர்ச்சி குன்றிய ஒருவருக்கு ரூ.20,000 மதிப்பிலான ஐ-பேடும், 15 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 850 வீதம் ரூ.12,750 மதிப்பிலான காதொலிக் கருவிகள் ஆகியவற்றையும் ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத், தனித்துணை ஆட்சியர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.