மத்திய அரசு இணையதள மருந்து வணிகத்தைக் கொண்டு வந்தால், அகில இந்திய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் 50-ஆவது ஆண்டை முன்னிட்டு, சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. கே.செல்வன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஜெ.ராமசந்திரன், மாநில பொருளாளர் கே.பி.ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கோரிக்கை விடுத்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.கே. செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜிஎஸ்டி வரி விதிப்பில் வணிகர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இணையதள மருந்து வணிகம் அமைப்பதில் மத்திய அரசு ஒரு வரைவினை கொண்டு வந்துள்ளனர். இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இணையதள மருந்து வணிகம் அமைத்தால் பொதுமக்களுக்கு அதிக பாதிப்புகளை உருவாக்கும். இதனால் மருந்து வணிகத்தில் பலர் வேலைவாய்ப்பினை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். இதனால் மத்திய அரசு இணையதள மருந்து வணிகத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய அளவில் மருந்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர் என்றார்.
கூட்டத்தில், சங்கத் தலைவர் ஏ.எஸ்.ஷிண்டோ, பொதுச்செயலாளர் சுரேஷ்குப்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.