மணல் தட்டுப்பாடு பிரச்னையைத் தீர்க்க அனைத்து தாலுக்காக்களிலும் கிடங்கு அமைத்து மணல் வழங்க வேண்டும் என இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் சம்மேளன மாநிலக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலக் குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் ஆர்.சிங்காரவேலு தலைமையில் மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மணல் தட்டுப்பாடு பிரச்னை, மத்திய அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றால் கட்டுமானத் துறை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதற்கு, இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனம் கண்டனம் தெரிவிக்கிறது. மணல் தட்டுப்பாடு பிரச்னையை தீர்க்க தெலங்கானா மாநிலம் போல், அனைத்து தாலுக்காவிலும் கிடங்கு அமைத்து, குறைந்த விலையில் மணல் வழங்கிட வேண்டும், மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி வழங்குவது, வரும் நவம்பர் மாதத்தில், மாநில அளவிலான கட்டுமானத் துறை வல்லுநர்கள்,தொழில்துறையினர், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் வகையில் சென்னையில் கருத்தரங்கை நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சிஐடியு மாநில பொதுச் செயலர் ஜி.சுகுமாரன், கட்டுமான சம்மேளனத்தின் பொதுச்செயலர் டி.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.