சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு நவம்பர் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுவர்களை சிறப்பு செய்யும் வகையில், சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறுவோருக்கு ரூ.1லட்சம் பொற்கிழியும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகின்றன.
நிகழாண்டுக்கான தமிழக அரசின் பெரியார் விருதை வழங்குவதற்கு உரிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமூகத்தைச் சார்ந்த மக்களின், சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சிகள், அம்மக்களின் வாழ்க்கைத்தரம் உயர பணிகள் செய்திருக்க வேண்டும். அதுபோல், அவர்கள் மேற்கொண்ட சாதனைகள் ஆகியவற்றுடன், பெயர், சுயவிவரம், முழு முகவரியுடன் வரும் நவம்பர் 11-ஆம் தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர், 2-ஆவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
எனவே, சமூக நீதிக்காக பாடுபடுபவர்கள் மேற்கொண்ட வழிமுறையினை பின்பற்றி, சமூக நீதிக்கான பெரியார் விருது பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.