மதுராந்தகம் பகுதியில் நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் வழக்குரைஞர், வியாபாரி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
திருக்கழுகுன்றத்தைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் தம்பிரான் (56). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பரை பார்த்து விட்டு, மோட்டார் சைக்கிளில், மதுராந்தகத்தில் இருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். கருங்குழி மேலவலம்பேட்டை நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் அவர் மீது மோதியது. பலத்த காயம் அடைந்த வழக்குரைஞர் தம்பிரான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளர் எஸ்.தர்மலிங்கம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு விபத்தில் வியாபாரி சாவு:
புதுச்சேரி, குச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (45), தேங்காய் வியாபாரி. திங்கள்கிழமை காலை இவர் உறவினர் வீட்டு திருமணத்துக்கு வந்து விட்டு, பேருந்து நிலையம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலை, வெண்ணாங்குபட்டில் இருந்து தேன்பாக்கத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் ராமமூர்த்தி நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இந்த விபத்து குறித்து சூனாம்பேடு காவல் ஆய்வாளர் ரவிக்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.