தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் அரசினர் சிற்பக் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு சிலை வடிக்கும் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.
இரு தினங்களுக்கு நடைபெறும் இப்போட்டியை கல்லூரி முதல்வர் ஜெ.ராஜேந்திரன் தலைமையில், மத்திய அரசின் லலித் கலா அகாதெமி விருது பெற்ற சிற்பக் கலைஞர் த.பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில் கற்சிற்பம், மரச்சிற்பம், உலோகச் சிற்பம், சுதைச் சிற்பம் உள்ளிட்ட பிரிவுகளில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்படவுள்ளன.