செங்கல்பட்டை அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அந்த முயற்சி பயனளிக்காததால், ரூ. 20 லட்சம் தப்பியது.
மகேந்திரா சிட்டியில் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் பணிபுரிவோர் அங்கு வைக்கப்பட்டுள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தனியார் வங்கி ஏடிஎமில் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. தனியார் வங்கி ஏடிஎம் சேவை இயந்திரத்தை மர்ம ஆசாமிகள் உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் பணத்தை எடுக்க முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர். இதனால் அதில் வைக்கப்பட்டிருந்த ரூ. 20 லட்சம் கொள்ளை போகாமல் தப்பியது.
இதுகுறித்து செங்கல்பட்டு கிராமிய காவல்நிலையத்தில் வங்கி அதிகாரி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.