திருக்கழுகுன்றம் வட்டம் பகுதியில் புதிதாக பணியில் சேர்ந்த சத்துணவுப் பணியாளர்கள் மூன்று மாதங்களாகியும் தங்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் இவ்விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிடவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கழுகுன்றம் வட்டத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் காலியாக இருந்த சத்துணவு ஊழியர்களுக்கான பணியிடங்களுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில், பணியமர்த்தப்பட்ட புதிய சத்துணவு ஊழியர்களுக்கு இரண்டு மாத ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு இதுவரையிலும் மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் பணியில் சேர்ந்த ஊழியர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அலுவலகத்தில் கேட்டால் ஜிபிஎஃப் எண் வராததால் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அலைக்கழிப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர். எனவே இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிதாக பணியில் சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.