காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை இருவர் உயிரிழந்தனர். ஆரியபெரும்பாக்கம், பொய்யாகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாதவன் (40), பாலன் (48). இவர்கள் இருவரும் தாமல் பகுதியில் இறந்த உறவினர் சடலத்துக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காஞ்சிபுரம்-தாமல் புறவழிச்சாலையை அவர்கள் கடக்க முயன்றபோது, சென்னையிலிருந்து ஒசூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில், பாலன், மாதவன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு,சம்பவ இடத்திலேயே இறந்தனர். பாலுசெட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.