காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல், மாட்டுப் பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
உழவுக்கும், உழவுக்கு உறுதுணையாக உள்ள மாட்டிற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல், மாட்டுப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதன்படி, காஞ்சிபுரம், அதைச் சுற்றியுள்ள வாலாஜாபாத், ஏகனாம்பேட்டை, அய்யம்பேட்டை, உத்தரமேரூர், கீழ்கதிர்பூர், விஷார், கீழம்பி, பெரும்பாக்கம், மானாம்பதி, விப்பேடு உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சனிக்கிழமை போகி கொண்டாடினர்.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபட்டனர். அதுபோல, நகர மக்களும் தங்களது வீடுகளின் முன் அதிகாலையில் கோலமிட்டு, புத்தாடைகள் அணிந்து, பெரியவர்களிடம் ஆசி பெற்றும், பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கலையொட்டி,திங்கள்கிழமை, உழவுக்கு உதவியாக இருக்கும் ஏர் கலப்பைக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, பசு மாடு, ஆடு, எருமை உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி, அவற்றுக்கு பூஜை செய்து வழிபட்டனர். பின்பு, அலங்காரம் செய்து வீதிகளில் உலவவிட்டு கொண்டாடினர்.