மாமல்லபுரத்தில் காணும் பொங்கலையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலில் குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்துக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். இந்த ஆண்டும் காணும் பொங்கலையொட்டி செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. சுப்பாராஜூ தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் திங்கள்கிழமை முதலே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வாகனங்களை கிழக்கு கடற்கரைச் சாலை புறவழிச் சாலையிலேயே போலீஸார் நிறுத்தினர். செவ்வாய்க்கிழமை புறவழிச்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடலில் இறங்காதவாறு தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.