தொழிலாளர் துறை நடத்திய ஆய்வில், பணியில் ஈடுபடுத்தப்பட்ட 5 சிறுமிகள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
தொழிலாளர்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களில் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தொழிலாளர் உதவி ஆணையர் ரவிஜெயராம் தலைமையிலும், துணை ஆய்வர்கள், சிறார் உதவி காவல் பிரிவு, குழந்தைகள் உதவி மையம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஆகியவற்றுடன் இணைந்து, வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், காரப்பாக்கம் ரிவர் வியூ காலனி தங்கும் உணவு விடுதியில் பணிபுரிந்து வந்த 4 சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள், அப்பகுதியில் உள்ள பாத்திமா குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து, பாலவாக்கத்தில் உள்ள தனியார் பல் மருத்துவர் வீட்டில், பணியாளராக இருந்த சிறுமி மீட்கப்பட்டு, செங்கல்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தொழிலாளர் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டம், பாலவாக்கம், காரப்பாக்கம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 5 சிறுமிகளை மீட்டு, உரிய காப்பகங்களில் தங்க வைத்துள்ளோம். தொடர்ந்து, மீட்கப்பட்ட சிறுமிகளின் வயது சான்று ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டோர் மீது, துறைரீதியான நடவடிக்கை எடுப்போம்.
மேலும், கடைகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் தொழிலாளர் துறை ஆய்வு செய்யும்போது, குழந்தை தொழிலாளர்கள் எனக் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டோர் மீது துறை ரீதியாகவும், சிறார் சட்டத்தின் கீழும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.