தமிழ்நாடு' பெயர் மாற்றப் பொன்விழாவையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்த விவரம்: சென்னை மாகாணம் கடந்த 1967ஆம் ஆண்டில் தமிழ்நாடு' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, இவ்வாண்டு 50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, தமிழ்நாட்டின் பெருமைகளையும், தமிழர் பெருமைகளையும் உணர்த்தும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்படவுள்ளன.
தொடர்ந்து, மாநில அளவிலும் நடைபெறவுள்ள இப்போட்டிகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி, இப்போட்டிகளுக்கான தலைப்புகள், தமிழ் மொழியின் பெருமையினை உலகுக்கு எடுத்துரைத்த, பேரறிஞர் அண்ணா, பாரதியார், பாரதிதாசன், திரு.வி.கல்யாண சுந்தரனார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் படைப்புகளிலிருந்து தெரிவிக்கப்படும்.
மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் முறையே, ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. தொடர்ந்து, மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெற அனுமதிக்கப்படுவர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் முறையே, ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.10,000 மற்றும் தலா 4 கிராம் தங்கப்பதக்கம் வழங்கப்படும். இப்பரிசானது, சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு 50-ஆம் ஆண்டு பொன்விழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்படும்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட மாணவர்களுக்கென வரும் 25ஆம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களது கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் போட்டி நடைபெறும் நாளன்று, மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம் என் மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.