திருப்போரூர் கந்தசுவாமி கோயில் குளத்தில் வியாழக்கிழமை இரவு 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அவர் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
திருப்போரூர் கந்தசுவாமி முருகன் கோயில் குளத்தில் பெண்ணின் சடலம் மிதப்பதாக வந்த தகவலின் பேரில் போலீஸார் அப்பகுதிக்குவந்தனர்.
அப்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, கோயில் குளத்தின் படிக்கட்டில் கிடந்த செல்லிடப்பேசியை மீட்டு அதில் இருந்த தொடர்பு எண்களுடன் போலீஸார் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போதுல், கோயில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டவரின் செல்லிடப்பேசிதான் அது என்பது தெரிய வந்தது. மேலும், அப்பெண் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஜெயலட்சுமி(50) என்பதும் தெரிய வந்தது.
அவர் குளத்தில் இறங்கி கால் கழுவியபோது தவறி விழுந்து குளத்தில் மூழ்கி இறந்தாரா? அவரது இறப்புக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.