ஒ.எம்.மங்களம் பகுதியில் ஐந்து ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள சமுதாய நலக்கூட கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியதைத் தொடர்ந்து அதனை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், ஒ.எம்.மங்களம் ஊராட்சியில் கடந்த 2013-2014-ஆம் நிதியாண்டில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சமுதாய நலக்கூடம் கட்ட ரூ. 32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில், திடீரென கட்டடப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. ஐந்து ஆண்டுகளாக கட்டடப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பாதியில் நிற்கும் அந்தக் கட்டடம் மது அருந்தும் கூடமாக மாறியுள்ளது.
இந்நிலையில் ஒ.எம்.மங்களம் பகுதிக்கு திங்கள்கிழமை வந்த ஆட்சியர் பா.பொன்னையாவிடம் அப்பகுதி மக்கள் இது
குறித்து முறையிட்டனர். இதையடுத்து அந்த சமுதாய நலக் கூட கட்டடத்தைப் பார்வையிட்டு ஆய்வு நடத்திய ஆட்சியர் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த ஆய்வின்போது ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி, முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் பா.கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் பங்கையர்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.