சமூக ஆர்வலர் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
மதுராந்தகம் அருகே சமூக ஆர்வலரின் அலுவலகம் மீது மர்ம நபர்கள் புதன்கிழமை பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கம், கீழ்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைப் பகுதிகள், அரசுக்குச் சொந்தமான பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து வீடுகளையும், கடைகளையும் கட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் கைப்பற்ற வேண்டும் எனக் கோரியிருந்தார். அதன்படி, திங்கள், செவ்வாய்க்கிழமை என இரு நாள்களாக செய்யூர் வட்டாட்சியர் லட்சுமி தலைமையில், வருவாய்த் துறையினர் நில ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். அதில் சில பகுதிகள் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் ராஜாவுக்குச் சொந்தமான அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் புதன்கிழமை காலை பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு, தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ராஜா மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் விசாரணை நடத்தினார்.