சென்னை கேளம்பாக்கத்தில் தனியார் உணவகத்தினுள் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்ட வழக்கில் வழக்குரைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் மாதவன். இவர், சென்னை, அண்ணா நகரில் தங்கி வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குச் சொந்தமாக, கேளம்பாக்கத்தை அடுத்த படூரில் விருந்தினர் இல்லம் உள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு படூரில் உள்ள தனியார் உணவகத்துக்குச் சென்றுள்ளார். அங்கு சைவ உணவுக்கு ஆர்டர் கொடுத்தாராம். ஆனால் அசைவ உணவு பரிமாறப்பட்டதாகவும், இதனால் அங்கிருந்த தொழிலாளர்களுக்கும், மாதவனுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, உணவகத்தின் மேலாளர், தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இதனால் மேலாளருடன் மாதவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாதவன் தனது கார் ஓட்டுநரை அழைத்து, காரில் உள்ள பெட்டி ஒன்றை எடுத்து வரும்படி கூறியுள்ளார்.
பின்னர் பெட்டியை வாங்கிய மாதவன், அதில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மேலாளர் சங்கரலிங்கத்தை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் குறிதவறி, அங்கிருந்த கண்ணாடி தடுப்பில் குண்டு பாய்ந்ததில் கண்ணாடி நொறுங்கியது.
இதனால் உணவகத் தொழிலாளர்கள் அலறி கூச்சலிட்டுள்ளனர். பின்னர், மாதவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கேளம்பாக்கம் போலீஸார், மாதவனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவரிடம் இருந்து 5 குண்டுகள் கொண்ட துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர். துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் அவரிடம் இல்லையென கூறப்படுகிறது.