மேல்மருவத்தூர் ஏரியை சீரமைத்து பறவைகள் சரணாலயம் அமைக்குமாறு பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் இங்கு வந்துவிட்டு, பின்னர் மாமல்லபுரம், வேடந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்கின்றனர்.
அரசின் பொதுப்பணித் துறையினர் ஏரியை ஆழப்படுத்தியதாலும், கோடை வறட்சிக் காலத்திலும், எப்போதும் வற்றாத நீர்த் தடமாகவும் மேல்மருவத்தூர் ஏரி திகழ்கிறது. மேல்மருவத்தூர் ஊராட்சிக்கு உள்பட்டு, ஆதிபராசக்தி கோயிலுக்கும், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியும் இந்த ஏரி அமைந்துள்ளது. இங்கு அதிக அளவில் நிழல்தரும் கடம்ப மரங்களும், இரும்பினால் செய்யப்பட்ட அகன்ற தட்டுகளும், சிமெண்ட் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வருகின்ற வெளிநாட்டுப் பறவைகளும், இந்திய வெள்ளை கொக்கு, சாம்பல் நாரை உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளும் இங்கு தங்கி கூடு கட்டி இனப் பெருக்கத்தில்ஈடுபடுகின்றன. இங்கு வெள்ளை அரிவாள் மூக்கன், நீர் காகம், அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை, புள்ளியழகு குள்ளிகடா, கரண்டிவாயன், சாம்பல் நாரை, சின்ன வெள்ளை கொக்கு, குருட்டு கொக்கு உள்ளிட்ட பறவைகள் தற்சமயம் உள்ளன. இந்த ஏரியானது ஆதிபரா சக்தி சித்தர்பீட நிர்வாகிகள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் ஆகியோரின் முயற்சியால், ஆழப்படுத்தப்பட்டும், கரைகள் பலப்படுத்தப்பட்டும், கரை பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் தரமான சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. சாலைகளுக்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதுடன், சரணாலயத்துக்கான பெயர்ப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்த ஏரியின் நடுவில் மரங்களில் அமர்ந்துள்ள வெளிநாட்டுப் பறவைகளைக் கண்டு களித்து செல்கின்றனர்.
ஏராளமானோர் இங்கு வந்து செல்வதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இங்கு நிரந்தரமாக பறவைகள் சரணாலயத்தை அமைக்க வேண்டும் என பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.