ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் (பொறுப்பு) கிராம நிர்வாக அலுவலர்களாகப் பணியாற்றி வந்தவர்கள் பணிச்சுமை காரணமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களைத் தவிர மற்ற கிராமங்களின் கணக்குகளை கடந்த வியாழக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம நிர்வாகப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்றும், கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக உள்ள கிராமங்களில் கூடுதல் கிராமப் பணிகளைச் சேர்த்து பார்த்து வந்ததைத் திரும்ப ஒப்படைப்பது என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில கூட்டத்தில் அண்மையில்
முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 10 கிராம நிர்வாக அலுவலர்கள், தாங்கள் கூடுதலாக பார்த்து வந்த 17 கிராமங்களின் கணக்குப் புத்தகம், வரைபடம் உள்பட 17 கிராம அலுவலகத்தில் உள்ள 21 ஆவணங்களை வியாழக்கிழமை ஒப்படைத்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் வ.தியாகராஜன் கூறியதாவது:
ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 100 வருவாய் கிராமங்கள் உள்ளன. வட்டத்தில் மொத்தம் 37 கிராம நிர்வாக அலுவலர்கள் இருக்க வேண்டும். ஆனால், 27 கிராம நிர்வாக அலுவலர்கள்தான் பணியில் உள்ளனர்.
10 கிராம நிர்வாகப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் 17 கிராமங்களின் கணக்குகளைக் கூடுதலாக கிராம நிர்வாக அலுவலர்கள் கவனித்து வருகின்றனர். ஏற்கெனவே, கிராம நிர்வாக அலுவலர்களுக்குப் பணிச்சுமை அதிகமாக உள்ளது. இந்தப் பணி முடிவதற்குள் வறட்சி நிவாரணம் தொடர்பாக கணக்கெடுக்கும் பணி தொடங்க வேண்டும் என பணிக்கு மேல் பணி என்று மாவட்ட நிர்வாகம் திணித்து வருகிறது. எனவே, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கிராமத்தில் கூடுதல் பணி செய்த பிச்சிவாக்கம், மகாதேவிமங்கலம், விவபுரம், எருமையூர், எழுச்சூர்(அ), கிளாய், வெங்காடு, இரும்பேடு, நாவலூர், காஞ்சிவாக்கம், குண்டுபெரும்பேடு, வளையங்கரனை, ஒரகடம், பூதனூர், சென்னகுப்பம் எடையார்பாக்கம், ஓ.எம்.மங்கலம் ஆகிய 17 கிராமங்களில் கூடுதல் பணியைப் பார்த்து வந்த கிராம நிர்வாக அலுவலர்கள், அந்த கிராமங்களின் தொடர்புடைய 21 ஆவணங்களை ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்துள்ளோம் என்றார் அவர்.