மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் அவதாரத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையில் நனைந்தபடி திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரின் வடம்பிடித்து இழுத்து பெருமாளை வழிபட்டனர்.
நாட்டில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் 63ஆவது திருத்தலமாக மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் விளங்குகிறது. இங்கு 10 நாள் பூத்தாழ்வார் அவதாரத் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 9ஆம் நாலான வியாழக்கிழமை, தேரோட்டம் நடைபெற்றது. தலசயனப் பெருமாளும், பூதத்தாழ்வாரும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் அமர்ந்து வர தோரோட்டம் புறப்பட்டது.
நான்கு மாடவீதிகள் வழியாக தேர் பவனி வந்தபோது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி கொட்டும் மழையிலும் நனைந்தபடியே தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். வழியெங்கும் தேருக்கு முன்பாக பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து, பெருமாளையும் பூதத்தாழ்வாரையும் தரிசனம் செய்தனர்.
தேர் செல்லும் பாதை நெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டதோடு, மோர், குளிர்பானம் ஆகியவையும் வழங்கப்பட்டன. சுமார் 4 மணிநேரத்திற்குப் பிறகு தேர், நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்டம் காரணமாக மாமல்லபுரம் நகரில் சுமார் 4 மணிநேரம் மின்தடை செய்யப்பட்டது. தேர், நிலையை அடைந்த பின்னர், மின் கம்பிகள் இணைக்கப்பட்டு மின்சார விநியோகம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் சங்கர், பட்டாச்சாரியார்கள், விழாக் குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர்.