புதிதாக சாலை அமைக்கக்கோரி கொருக்கந்தாங்கல் குடிருப்புவாசிகள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ஆதனூர் கிராமத்துக்குட்பட்ட கொருக்கந்தாங்கல் பகுதியில் எல்.வி.ஆர். நகர், எம்.ஆர். நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகளான கழிவுநீர்க் கால்வாய், சாலை வசதிகள் என எதுவும் முறையாக இல்லை. நாங்கள் வசித்துவரும் 23 அடி அகலம் உள்ள சாலை மண்சாலையாகவே உள்ளது. இதனால், மழைக்காலங்களில் அதிகப்படியான மழைநீர் தேங்கி இச்சாலையைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், இங்கு தேங்கும் மழைநீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாவதோடு, தொற்று நோய்கள் பரவும் சூழலும் உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே, எங்கள் நகர்ப் பகுதிகளில் புதிதாக சாலை அமைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.