ரெளடி ஸ்ரீதரின் கூட்டாளிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வழக்குரைஞரை மர்ம கும்பல் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.
காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், மண்டபம் தெரு பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார் (26). வழக்குரைஞரான இவர், அண்மையில் வெளிநாட்டில் தற்கொலை செய்து கொண்ட ரெளடி ஸ்ரீதரின் கூட்டாளியான தணிகா என்பவரின் வழக்குரைஞர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தந்தையின் தேநீர்க் கடையில் பணி மேற்கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசம் அணிந்தபடி வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அரிவாள்களால் சிவகுமாரை சரமாரியாக வெட்டியது.
இதில் பலத்த காயங்களுடன், அங்கிருந்து தப்பிய சிவகுமார், கடைக்குப் பின்னால் உள்ள தனது வீட்டுக்குள் மறைந்து கொண்டார். இதையடுத்து, அந்தக் கும்பல் வாகனங்களில் தப்பிச் சென்றது. இதைத் தொடர்ந்து, சிவகுமார் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகுமார் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிவகாஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து, தப்பிச் சென்ற மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெளடி ஸ்ரீதரின் மறைவுக்குப் பின், அவரது கூட்டாளிகள் தணிகா, தினேஷ் ஆகிய இருவருக்கும் இடையே அவ்வப்போது கடும் மோதல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.