ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரி நீரில் மூழ்கிய பள்ளி மாணவர்கள் இருவர் சாவு

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பீமன்தாங்கல் ஏரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்த தனியார் பள்ளி மாணவர்கள் இருவர் ஏரி
ஜெகத்செல்வன், மோகேஷ்வரன்
ஜெகத்செல்வன், மோகேஷ்வரன்


ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பீமன்தாங்கல் ஏரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்த தனியார் பள்ளி மாணவர்கள் இருவர் ஏரி
நீரில் மூழ்கி இறந்தனர். 
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். அவரது மகன் மோகேஷ்வரன் (16). ஸ்ரீபெரும்புதூர் மகாத்மா காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சரவணனின் மகன் ஜெகத்செல்வன் (16). நண்பர்களான இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் விடுமுறை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, பீமன்தாங்கல் பகுதியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றனர். 
விளையாடிய பின், அதே பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றனர். அப்போது, ஏரி நீரில் ஜெகத்செல்வனும், மோகேஷ்வரனும் மூழ்கிவிட்டனர். இதையடுத்து நீண்ட நேரமாக குளிக்கச் சென்றவர்கள் வராததைக் கண்டு சக நண்பர்கள் அருகில் உள்ளவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். 
இதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இருங்காட்டுக்கோட்டை தீயணைப்புத் துறையினர் ஏரியில் மூழ்கிய மாணவர்களின் சடலங்களை தீவிரமாகத் தேடினர். ஞாயிற்றுக்கிழமை இரவு வெளிச்சமின்மை காரணமாக தேடுதலில் தொய்வு ஏற்பட்டது. 
இதையடுத்து, திங்கள்கிழமை காலையில் இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புப் படையினர் மாணவர்களின் சடலங்களைத் தேடினர். பல மணி நேரம் தேடியும் சடலங்கள் கிடைக்கவில்லை. 
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் உறவினர்கள், போலீஸாரிடமும் தீயணைப்புத் துறையினரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். அவர்களை ஸ்ரீபெரும்புதூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா, காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீஸார் சமாதானப்படுத்தினர். 
மாணவர்களின் சடலங்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை அரக்கோணத்தில் இருந்து வரவழைப்பதாக உறுதியளித்தனர். அதன்படி, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்தனர்.
இதனிடையே, ஏரியில் இருந்து மோகேஷ்வரனின் சடலத்தை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றொரு மாணவரான ஜெகத்செல்வனின் சடலத்தை மீட்டனர். இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 
ஏரியில் மூழ்கி மாணவர்கள் இறந்தது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com