இணையதள வணிகம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சத்துக்கு மேல் மோசடி: பாதிக்கப்பட்டோர் எஸ்.பி.யிடம் புகார்

இணையதள வணிகம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்த இரண்டு நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்
பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மணிபாலன், ராம்குமார்.
பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மணிபாலன், ராம்குமார்.


xஇணையதள வணிகம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்த இரண்டு நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சந்தோஷ் ஹதிமானியிடம் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டோர் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட வரதராஜசேகரன் உள்ளிட்டோர் தங்கள் மனுவில் கூறியிருப்பதாவது: 
காஞ்சிபுரம் வட்டம், சிட்டியம்பாக்கம் ஒத்தவாடைத் தெருவில் வசித்து வருகிறேன். தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தேன். இந்நிலையில், எனது கல்லூரி நண்பரான ராம்குமார் என்பவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு என்னைத் தொடர்பு கொண்டார். அப்போது, தான் செய்து வரும் க்யூநெட் இ-காமர்ஸ்' 
(ணய்ங்ற் ங்-ஸ்ரீர்ம்ம்ங்ழ்ஸ்ரீங்) என்ற இணையதள வணிகத்துக்கு கூட்டாளியாக என்னை சேர்த்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார். குறைந்த முதலீடாக ரூ.4 லட்சத்தை அளிக்குமாறும் கேட்டார். இதையடுத்து, நண்பர் ராம்குமாரின் உயரதிகாரி மணிபாலனின் இணைய வங்கிக் கணக்குக்கு கடந்த ஆண்டில் அத்தொகையை அனுப்பி வைத்தேன். அதேபோல், எனது மற்றொரு நண்பர் உமாவடிவேலனும் இதைக் கேட்டு ரூ.11 லட்சம் முதலீடு செய்தார்.
நாங்களும் தொழில் குறித்து பலமுறை ராம்குமார் மற்றும் மணிபாலனிடம் கேட்டோம். ஆனால், அவர்கள் முரணான பதிலையே அளித்தனர். அதோடு, எங்களை சென்னைக்கு வரவழைத்து இணையதள வணிகம் தொடர்பாக, விஜயகுமார், பிரபு, ரேஜோ ஆகியோர் எங்களை மூளைச்சலவை செய்தனர். 
இதையடுத்து, எங்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக்கூறி எங்களுடைய கடவுச்சீட்டையும் பெற்றுக் கொண்டனர். 
அதன்பிறகு, ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் அவர்களைத் தொடர்பு கொண்டு தொழில் குறித்து கேட்டோம். அதற்கும் முரணாகவே பேசினர். தொடர்ந்து, நாங்கள் இணைய வங்கிக் கணக்கில் செலுத்தி பணத்தை திரும்பக் கேட்டோம். ஆனால், அவர்கள் எங்களது பணத்தை மட்டுமின்றி, கடவுச்சீட்டையும் தர மறுத்தனர். அதோடு, நாங்கள் பணத்தைப் பெற்றது போல், நீங்களும் மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்துக் கொள்ளுங்கள்' என செல்லிடப்பேசி மூலம் தெரிவித்தனர். 
அப்போதுதான், நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்து கொண்டோம். அத்துடன், எங்களைப் போன்றே காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ராம்குமாரின் நட்பு வட்டாரத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் ரூ.50 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தி ஏமாந்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் மனு அளித்தோம். ஆனால், இதுவரை வழக்கு பதியப்படவில்லை. அதோடு, எங்கள் புகாரையும் ஏற்க மறுக்கின்றனர். மோசடி நண்பர் ராம்குமாரின் வீட்டில் நாங்கள் கேட்டதற்கு அவர் இந்த ஊரிலேயே இல்லை' என்று கூறிவிட்டனர். 
இந்நிலையில், இந்தப் போலி வணிக கும்பலானது, மேலும் பலரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. 
இந்தக் கும்பலுக்குப் பின்னால் பல்வேறு நபர்களும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிய வருகிறது. எனவே, இந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து, நாங்கள் இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் என வரதராஜசேகரன் உள்ளிட்டோர் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புகார் குறித்து எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி, தினமணி செய்தியாளரிடம் கூறுகையில், பணமோசடி தொடர்பான மனுதாரரின் புகார் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு குற்றப் புலனாய்வு டிஎஸ்பியிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com