ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத் தொழிற்சாலை ஊழியர்கள் அத்தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரகடம் சிப்காட் பகுதியில் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் 700 நிரந்தரத் தொழிலாளர்களும், 3,300 ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இத்தொழிற்சாலை பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த சில வருடங்களாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. அதே போல் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சங்கத்தை அமைத்துள்ளனர். அதற்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் அனுமதி வழங்காமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில், தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; தொழிற்சங்கம் அமைக்க தொழிற்சாலை நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்; பயிற்சித் தொழிலாளர்களைப் பணிநிரந்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 600 தொழிலாளர்கள் திங்கள்கிழமை காலை முதல் பணியைப் புறக்கணித்து தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.