தூப்புல் வேதாந்த தேசிகரின் 750ஆவது ஆண்டு மகோற்சவம் நிறைவு பெற்றது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வேதாந்த தேசிகர் கோயில், விளக்கொளி கோயில் தெருவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திர வார்ஷிக (ஆண்டு) மகோற்சவமானது 10 நாள்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதன்படி, 750ஆவது ஆண்டு உற்சவம், கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.
நாள்தோறும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் தேசிகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். கடந்த செவ்வாய்க்கிழமை ஏழாம் நாளன்று தேரோட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை விளக்கொளி பெருமாள் மங்களாசாசனம், அஞ்சலித் திருக்கோலத்தோடு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, இரவு வேளையில் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளிய வேதாந்த தேசிகர் வரதராஜப் பெருமாள் கோயில் மாட வீதிகள், முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து கோயிலை வந்தடைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, சனிக்கிழமை விமான உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது.