கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையத்தில் 250 கிலோ செம்மரக் கட்டைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
மாதர்பாக்கம் வனச்சரகர் மாணிக்கவாசகம் தலைமையிலான வனத்துறையினர் வெள்ளிக்கிழமை அதிகாலை ஈகுவார்பாளையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு இலகு ரக வாகனத்தை சோதனைக்காக நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் சென்றது.
இதைத்தொடர்ந்து, அந்த வண்டியை வனத்துறையினர் பின்தொடர்ந்து சென்று மடக்கினர். அப்போது, அதிலிருந்த 2 பேர் வண்டியை நிறுத்திவிட்டு, தப்பியோடி விட்டனர்.
இதைத்தொடர்ந்து வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் 5 செம்மரக் கட்டைகள் இருந்தன. சுமார் 250 கிலோ எடையுள்ள இவை ரூ.2.5 லட்சம் மதிப்புடையது.
இதையடுத்து வாகனம், செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து, வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.