கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாதர்பாக்கத்தில் ரூ.12 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி மன்றக் கட்டடம் பூட்டியே கிடக்கிறது.
மாதர்பாக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கட்டடம் ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாருக்கும் தெரியவில்லை. இதனால் இக்கட்டடம் பயன்பாடில்லாமல் உள்ளது.
ஏற்கெனவே, மாதர்பாக்கம் பஜாரில் பழைய கட்டடத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி மன்ற அலுவலகம், பொதுமக்கள் வந்து போக எளிதாக இருப்பதால் அவர்கள் தங்கள் தேவைகளுக்கு அங்கு செல்கின்றனர். அது மட்டுமின்றி ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், 8 வார்டு உறுப்பினர்கள் பதவி வெற்றிடமாக உள்ளது. இதற்கு முன் அப்பதவிகளில் இருந்தவர்கள் வந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், கடந்த 6 மாத காலமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. ஊராட்சி செயலர் மட்டும் மேற்கண்ட அலுவலகத்தில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு, மாதர்பாக்கம் பஜார் பகுதிக்குச் சென்று அங்கு பொதுமக்களை சந்தித்து வருகிறார்.
எனவே, திறக்கப்பட்டும் பயனில்லாத இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.