புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் திருவள்ளூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் பாண்டியராஜன், காந்திமதிநாதன், அருள்டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாநில அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையின் பேரில் ஊதியம் வழங்க வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசு துறையில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.