ஆர்.கே.பேட்டை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.
ஆர்.கே.பேட்டை - பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலை அருகே, கோரகுப்பம் ஏரியில் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஆர்.கே.பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து திருத்தணி டி.எஸ்.பி. பாலச்சந்தர், ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் போலீஸார் ஏரிக்கரைக்குச் சென்று கொலை செய்யப்பட்டவரின் சடலத்தைப் பார்வையிட்டனர். அப்போது வேறொரு இடத்தில் கொலை செய்து விட்டு சடலத்தை ஏரியில் வீசிவிட்டுச் சென்றது தெரியந்தது. விசாரணையில், இறந்தவர் ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த ஆதிநாராயணன் (46) என்பதும், ஓய்வு பெற்ற படைவீரரான இவர், தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்ட ஆர்.கே.பேட்டை போலீஸார், அதனை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.