திருத்தணி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தீயணைப்பு வாகனம் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளது.
திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை விழாவில் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் விபத்துகளில் இருந்து காப்பாற்றுவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
கடந்த 5 நாள்களாக பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இந்த வாகனங்கள் திருத்தணியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், திருவிழா முடிவடைந்ததும், தீயணைப்பு வாகனங்கள் அந்தந்தப் பகுதிகளுக்கு சென்றன. பள்ளிப்பட்டு பகுதியிலிருந்து வந்திருந்த தீயணைப்பு வாகனம் அகூர் கிராமத்தை கடக்கும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது.
இதில், ஓட்டுநர் தேவராஜனுக்கு கை எலும்பு முறிந்தது. இதுகுறித்து தகவலறிந்த அகூர் கிராம மக்கள், திருத்தணி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தேவராஜனை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிப்பட்டு தீயணைப்பு துறையினருக்கு கடந்த 1999-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த வாகனம், தற்போது சாலையில் இயக்க லாயக்கற்றது என்று கூறப்படுகிறது. புதிய தீயணைப்பு வாகனம் வழங்க வேண்டுமென 4 முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை வழங்கவில்லை. அரசின் மெத்தனமே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.