பொன்னேரி அருகே உள்ள ஆசானபுதூர் கிராமத்தில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை, பணம், செல்லிடப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பொன்னேரி காவல் எல்லைக்கு உள்பட்ட ஆசானபுதூர் கிராமத்தில் வசித்து வருபவர் பாலசுப்ரமணி (55). இடுக்கம் கிராமத்தில் உள்ள கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்தார். இந்நிலையில், இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த ரூ.2,000 ரொக்கம், செல்லிடப்பேசி, ஒரு கிராம் தங்க காசு ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இதேபோல், இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் பெருமாள் (61). இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வெள்ளி குங்குமச் சிமிழை திருடியுள்ளனர்.
மேலும், அருகில் வசிக்கும் முனிசுந்தரம் (58), வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 4,000 ரொக்கத்தை திருடினர்.
அதேபகுதியில் வசிக்கும் துரைசாமியிடம் (65) மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, வீட்டில் இருந்த விலை உயர்ந்த செல்லிடப்பேசியை எடுத்துச் சென்றனர். இந்த சம்பவங்கள் குறித்து பொன்னேரி போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 4 வீடுகளில் தொடர் திருட்டு நடைபெற்றதால் அப்பகுதி பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.