திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த வெங்கல் காவல் எல்லைக்கு உள்பட்ட கொசஸ்தலை ஆற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெறுவதாக போலீஸாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில், வெங்கல் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், போலீஸார் திங்கள்கிழமை அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, 2 டிராக்டர்களில் மணலை ஏற்றிக் கொண்டிருந்த மர்ம நபர்கள் போலீஸாரை கண்டதும், அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து இரு டிராக்டர்களையும் போலீஸார் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிந்து, டிராக்டரின் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.