செங்குன்றம் அருகே விவசாயியிடம் நகை பறித்த 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் (70). இவர் சிறுணியம் பகுதியில் விவசாயப் பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில், வாசுதேவன் சனிக்கிழமை பண்ணைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், அவர் மீது மோதி கீழே தள்ளிவிட்டனர். பின்னர், வாசுதேவன் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் வாசுதேவன் புகார் அளித்தார். இந்நிலையில், செங்குன்றம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கர்ணா, பாடியநல்லூர் சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி விசாரணை நடத்தினார். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த ஆய்வாளர் கர்ணா, அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினார்.
இதில் பிடிபட்டவர்கள் சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் (32), பெரம்பூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த வினோத் (32) என்பது தெரியவந்தது. மேலும், ஆட்டோ ஓட்டுநர்களான இவர்கள் இருவரும் வாசுதேவனிடம் நகை பறித்ததும், இவர்களுக்கு பெரம்பூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அஜீத்குமார் (23) சென்னை கொடுங்கையூர் எழில் நகரைச் சேர்ந்த பூபதி (25) ஆகியோர் உடந்தையாக இருந்ததும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் செங்குன்றம் போலீஸார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.