சென்னை அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் சாலையோரம் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்தில் சி.டி.எச். சாலையின் இருபுறமும் ராட்சத பிளக்ஸ் பேனர்கள், விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, பேனர்கள் வைக்க மூன்று நாள்களுக்கு முன், அனுமதி பெறவேண்டும். அதேபோல், பேனர்கள் வைத்த 3 நாள்களுக்குள் அகற்ற வேண்டும். ஆனால் அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் பகுதிகளில் இந்த விதி கடைப்பிடிக்கப்படுவதில்லை.
நிகழ்ச்சிகள் முடிந்தும் பேனர்கள் கழற்றப்படாததால், வேகமாக காற்று வீசும்போது, அவை கிழிந்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. மேலும், சாலையோரம் உள்ள மின்கம்பங்களில் விளம்பர பலகைகளால் மின்தடைகாலங்களில் சீரமைப்பு பணிக்காக, மின்வாரிய ஊழியர்கள் கம்பத்தில் ஏறமுடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே சாலையோர பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.