மாதவரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் செயின் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதவரத்தை அடுத்த சென்றம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ஜெபமணி (40). இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவ
மனையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், ஜெபமணி செவ்வாய்க்கிழமை இரவு, வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
மாதவரம் மேம்பாலம் அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர், ஜெபமணி அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து அவர் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்குப் பதிந்து, மர்மநபர்களை தேடி வருகிறார்.