திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
திருவள்ளூரை அடுத்த போளிவாக்கத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (30). இவர் தனது மனைவி துர்கா, குழந்தைகள் மோனிகா, யோகமித்திரன் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு மணவாள நகரில் இருந்து போளிவாக்கம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருவள்ளூரை அடுத்த புங்கத்தூரைச் சேர்ந்த ராமசாமியின் மகன் வெங்கடேசன் (28) ஸ்ரீபெரும்புதூரில் இருந்து மணவாளநகர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
மேல்நல்லாத்தூர் அருகே வந்தபோது, இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த ராமலிங்கமும், துர்காவும் ஆகியோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதுகுறித்து திருவள்ளூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.