திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனம் மீது டெம்போ மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
திருவள்ளூரை அடுத்த பட்டறைபெரும்புதூர் கிராமத்தைச் சேர்ந்த அரிதாஸ் மகன் ஜெகன் (21). தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு திருவள்ளூரில் இருந்து பட்டறைபெரும்புதூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில், லிப்ட் கேட்ட இளைஞர் ஒருவரையும் ஏற்றிச் சென்றுள்ளார்.
சிறுவானூர் அருகே சென்றபோது, இரு சக்கர வாகனம் மீது எதிரே வந்த டெம்போ மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த ஜெகன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூர் கிராமிய போலீஸார், பல்தத காயமடைந்த மற்றொரு இளைஞரை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு திங்கள்கிழமை அதிகாலை அவர் இறந்தார்.
இதுகுறித்து திருவள்ளூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜெகனுடன் லிப்ட் கேட்டு சென்றவர் திருவள்ளூர் நேதாஜி சாலையைச் சேர்ந்த முகம்மது அசேனின் மகன் முகம்மது ஆசிக் (21) என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக டெம்போ ஓட்டுநர் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீதரை (37) கைது செய்தனர்.