இஸ்லாமியர்களின் புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு திங்கள்கிழமை திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் டோல்கேட் அருகே உள்ள ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகை நிறைவடைந்ததும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இதேபோன்று பேரம்பாக்கம், மப்பேடு பள்ளி வாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையொருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.