திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் வரும் 31-ஆம் தேதி பங்குனி உத்திர பிரம்மோற்சவம் தொடங்குகிறது.
திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் திருவாலங்காட்டில் உள்ளது. சிவபெருமானின் 5 நடன சபைகளில் ஒன்றான இக்கோயிலில் நிகழாண்டுக்கான பங்குனி உத்திர பிரம்மோற்சவம் மார்ச் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி வரும் 29-ஆம் தேதி, பந்தக்கால் நடப்படுகிறது. 30-ஆம் தேதி இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடைபெறுகிறது. 31-ஆம் தேதி காலை 6 மணிக்கு இடபக் கொடியேற்றமும், இரவு 8 மணிக்கு சிங்க வாகனத்தில் உற்சவர் வீதியுலாவும் நடக்கிறது.
ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 8.45 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், இரவு 8 மணிக்கு சந்திர பிரபை, 2-ஆம் தேதி காலை 9 மணிக்கு அன்ன வாகனம், இரவு 8 மணிக்கு பூதவாகனம், 3-ஆம் தேதி காலை 9 மணிக்கு பல்லக்கு சேவை, இரவு 8 மணிக்கு நாக வாகன சேவை நடக்கிறது.
4-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மகர வாகனம், இரவு 8 மணிக்கு மூஷிக, மயில், ரிஷப வாகனத்திலும், 5-ஆம் தேதி மாலை 3 மணிக்கு புலி வாகனத்திலும், இரவு 10 மணிக்கு யானை வாகனத்திலும், 6 ஆம் தேதி காலை 10.15 மணிக்கு கமலத் தேரில் உற்சவர் உலா வருகிறார்.
இரவு 9 மணிக்கு கேடய உலாவும், 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கேடய உலாவும், இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவமும், அதிகாலை 4 மணிக்கு குதிரை, யாளி வாகனத்திலும், 8ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கேடய உலாவும், இரவு 10 மணிக்கு அபிஷேகம், விடிய சப்த பதமும், 9-ஆம் தேதி காலை 7 மணிக்கு கேடய உலாவும், மாலை 5 மணிக்கு கேடய உலாவும், 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு சாந்தி அபிஷேகமும், 11 ஆம் தேதி இரவு 10 மணிக்கு புஷ்பநாக ஊஞ்சல் சேவையும், 12ஆம் தேதி இரவு 10 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது பின்னர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வே. ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.