குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ரவி தெரிவித்துள்ளதாவது:
தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை பெய்யாததால் போதிய அளவு இந்த வருடம் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் வீடுகளில் தினசரி பயன்படுத்தும் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க இயலும். மேலும் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய் பழுதடைந்தால் அதனை உடனுக்குடன் சரிசெய்யும்படி பேரூராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதன்மூலம் பழுதடைந்த குடிநீர் குழாய் மூலம் நீர் கசிந்து வீணாவதைத் தடுக்கலாம். எனவே வீடுகளில் ஒரு சொட்டு குடிநீரை கூட வீணாக்காமல் அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
அதேபோல தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் ஏதேனும் உடைப்போ, நீர் கசிவோ ஏற்பட்டால் அது குறித்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு உடனடியாக, தெரியப்படுத்த வேண்டும் எனவும், வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகக் கட்டடங்கள், அரிசி ஆலைகள், திருமண மண்டபங்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அனைவரும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் எனவும் பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.