கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில், தமிழக அரசின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 172 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற விழாவுக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் ரவி தலைமை வகித்தார். அதிமுக ஒன்றியச் செயலாளர் கோபால்நாயுடு, நகரச் செயலாளர் மு.க.சேகர், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் ரமேஷ்குமார், ஷியாமளா தன்ராஜ், லோகாம்பாள் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் 172 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கினார்.
இத்திட்டத்தின் படி, அரசு மானியம் ரூ. 2.10 லட்சமும், பயனாளிகளின் பங்களிப்பாக ரூ.1.05 லட்சமும் என ரூ.3.15 லட்சத்தில் வீடுகள் கட்டப்படுகின்றன.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர்கள் சிராஜுதீன், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.