கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி, 5 கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள், பூண்டி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியத்தில் உள்ள தேவேந்தவாக்கம், மெய்யூர், பெருஞ்சேரி, மோவூர், கைவண்டூர் கிராமங்களில், கடந்த ஒரு மாதமாக குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதனால், இப்பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் அருகில் உள்ள கிராமங்களுக்கு நடந்து சென்று, விவசாய பம்ப் செட்களில் குடிநீர் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கக் கோரி, பூண்டி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை.
இதில், ஆத்திரமடைந்த மேற்கண்ட 5 கிராம மக்கள் மற்றும் பெண்கள் 300-க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை காலை பூண்டி ஒன்றிய அலுவலகம் முன், காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புல்லரம்பாக்கம் போலீஸார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து டிராக்டர்கள் மூலம் கிராமங்களில் குடிநீர் விநியோகம் செய்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.