மாதவரத்தில் அதிகாரிகளின் நடவடிக்கைக்குப் பிறகும் தண்ணீர் திருட்டு தொடர்ந்து நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மாதவரத்தின் பல்வேறு இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. அவற்றை டேங்கர் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள ஹோட்டல்கள், வணிக நிறுவனங்களில் விற்று வந்தனர்.
இதுகுறித்து, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் இயக்குநர் அருண்ராய்க்கு ஏராளமான புகார்கள் சென்றன.
இதையடுத்து, இயக்குநர் அருண்ராய் உத்தரவின்பேரில், பகுதி மண்டல பொறியாளர் ராஜா தலைமையில், மாதவரம் பகுதியில் ஆய்வு நடைபெற்றது. அப்போது 6 ராட்சத மோட்டார்களை பறிமுதல் செய்து, ஆழ்துளை கிணறுகளுக்கு "சீல்' வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில், மாதவரம் பகுதியில் ஜெனரேட்டர்கள் மூலம் மின்மோட்டார்களை இயக்கி, லாரிகளில் தொடர்ந்து தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது.
இவர்களை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்து சிறையில் அடைக்க வேண்டும் என மாதவரம் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.