சென்னை அம்பத்தூர், ஆவடி பகுதியில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் தூக்கமின்றி பெரிதும் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில் வரலாறுகாணாத வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகின்றனர். பகல் முழுவதும் வெயிலில் காய்ந்து, இரவு தூங்கச்சென்றால் மின்வெட்டால் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் பகுதிகளில் இரவு நேரங்களில் கடுமையான மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் வெப்பம் தாங்காமல் தூங்கமுடியவில்லை.
இதுகுறித்து புகார் தெரிவிக்க மின்சாரவாரிய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் தொலைபேசியை எடுப்பதில்லை. இதனால், ஒப்பந்தப் பணியாளர்களை அழைத்து பழுதுகளை சரிசெய்தால், பெரும் தொகை கேட்கின்றனர்.
அம்பத்தூர் எம்.கே.பி.நகர், சிவானந்தா நகர், ஆசிரியர் காலனி, டி.ஜி.அண்ணாநகர் போன்ற பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரமே விநியோகிக்கப்படுகிறது.
இதனால் மின்சாதனப்பொருள்கள் பழுதடைகின்றன. இதுகுறித்து மின்வாரியத்தினரிடம் கேட்டபோது, மின்மாற்றியை மாற்றி அமைத்தால் மட்டுமே நிலைமை சீரடையும் என்றனர். கோடை வெயில் வாட்டி வரும் வேளையில், மின்தடை ஏற்படாமலும், சீரான மின்சாரம் விநியோகிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.