தமிழக விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென பிரதமர் மோடியிடம் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணியில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பொதுமக்களுக்கு மோர், பழச்சாறு, வெள்ளரி, தர்பூசணி வழங்கி பாண்டியராஜன் பேசியது:
90 சதவீத தொண்டர்கள் உள்ள ஓபிஎஸ் அதிமுகவே உண்மையான அதிமுக.
ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள 3 நிபந்தனைகளை நிறைவேற்றினால் அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும். தமிழகத்தில் வறட்சி, மழையின்மை காரணமாக விவசாயிகள் அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளனர். விவசாயிகள் தற்கொலை பெருகிய நிலையில் தமிழகத்தில் விவசாய கடனை வங்கிகள் தள்ளுபடி செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தில்லி சென்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதே கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்
என்றார்.
முன்னாள் மாவட்ட குழு தலைவர் பி.ரவிசந்திரன் தலைமை வகித்தார். ஆரணி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் கிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் புஷ்பலதா, டில்லி, ஜெயலலிதா பேரவைத் தலைவர் ரவி, எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள் நந்தன், வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.