திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேலாண்மை திட்டத்தின் கீழ் பயனாளிக்கு மானிய விலையில் விசைத் தெளிப்பானை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேலாண்மை திட்டத்தின் கீழ் விவசாயிக்கு விசைத் தெளிப்பான் மற்றும் பண்ணைக் கருவிகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தொடங்கி வைத்தார்.
அதில் ஒரு பயனாளிக்கு சுமார் ரூ.6,800 மதிப்புள்ள விசைத் தெளிப்பானை 20 சதவீத மானிய விலையில் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு இதுபோன்ற உபகரணங்கள் 20 சதவீத மானிய விலையில் வழங்கப்படும் என்றார். பின்னர் பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினருக்கு சுய தொழில் செய்ய ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின்போது, நீர்வடிப் பகுதி மேம்பாட்டு துணை இயக்குநர் ஸ்ரீவித்யா, உதவி பொறியாளர் லட்சுமிகாந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.