பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகள் 104 (24 மணிநேர சேவை) கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, கல்வி மற்றும் மனநல ஆலோசனைகளை பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாவட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் மதிப்பெண் குறைவு, தேர்வில் தோல்வி போன்றவற்றால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பலர் விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றனர். மாணவர்களும், பெற்றோர்களும் மன அழுத்தத்திலிருந்து விடுபட கல்வி மற்றும் மன நல ஆலோசகர்களைக் கொண்டு 24 மணி நேரமும் இயங்கும் 104 என்ற கட்டணமில்லா, அரசு மருத்துவ ஆலோசனை சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் இந்த மையத்தை அணுகி பயன்பெறலாம்.
மேலும், ஆலோசனைகள் பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் 044 - 27665595 என்ற தொலைபேசி எண்ணிலும், ஸ்நேகா ஆலோசனை மையத்தை 044 - 24640050, 044 - 24640060 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.