கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு, வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகுனிராம் (65). இவர் சென்னை பெசன்ட் நகரில் தொழிற்சாலை ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள நண்பர் டிக்காஷ் குமாருடன் (48) தங்கியிருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீகுனிராமும், டிக்காஷ் குமாரும் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வெள்ளிக்கிழமை சென்றனர். அப்போது, ஸ்ரீ குனிராமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மயங்கி விழுந்து, உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார், அங்கு வந்து, சடலத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.