கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கென்னடியை (51) தாக்கியதாக கல்லூரி மாணவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருப்பவர் ஆரணியைச் சேர்ந்த கென்னடி. இம்மருத்துவமனைக்கு சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை செய்து வரும் முகம்மது ஜின்னாவை (30) சிகிச்சைக்காக அவரின் நண்பர் முகம்மது மாலிக் (20) அழைத்து வந்தார். இந்நிலையில் மருத்துவரைப் பார்க்க அமர்ந்திருந்த முகம்மது ஜின்னா, முகம்மது மாலிக் ஆகியோரை கல்லூரி மாணவர் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் கிண்டல் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் முகமது மாலிக்கை தாக்கியுள்ளனர்.
இது குறித்து முகம்மது ஜின்னா மருத்துவர் கென்னடியிடம் புகார் அளித்தார். தொடர்ந்து மருத்துவர் கென்னடி, சக்திவேல் உள்ளிட்டோர்களிடம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தவர்களை ஏன் கிண்டல் செய்கிறீர்கள் என தட்டிக் கேட்ட போது, அவருடன் தகராறில் ஈடுபட்ட சக்திவேல் தரப்பினர், மருத்துவர் கென்னடியை கன்னத்தில் அடித்துள்ளார். தொடர்ந்து மருத்துவர் கென்னடி கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தரவே, போலீஸார் வந்து சக்திவேலை கைது செய்தனர். அப்போது, அவருடன் வந்தவர்கள் தப்பி ஓடினர். போலீஸார் சக்திவேல் மீது வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.